மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க சிறப்பு காவல் ரோந்து பணியை போலீஸ் சூப்பிரண்டு மீனா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கும் வகையில் சிறப்பு காவல் ரோந்து பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இந்த ரோந்து பணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் போலீஸ் சூப்பிரண்டு மீனா கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு குற்ற தடுப்பு நடவடிக்கை மற்றும் பாதுகாப்பான சாலை போக்குவரத்து ஆகியவற்றை கருத்தில் கொண்டு மயிலாடுதுறை மற்றும் சீர்காழி உட்கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்கள் வாரியாக தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் குறிப்பாக பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வோரின் நலனுக்காக கூடுதலாக 17 இருசக்கர வாகனங்கள் மற்றும் 2 நான்கு சக்கர வாகனங்கள் மூலம் சிறப்பு காவல் ரோந்து பணி செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு காவல் ரோந்து பணி மூலம் விநாயகர் சதுர்த்தி விழா குறித்த அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றுதல், தனியே வசிக்கும் மூத்த குடிமக்களின் நலனை பாதுகாத்தல், நெரிசலற்ற சாலை போக்குவரத்தை உறுதி செய்தல் போன்ற பணிகளை இந்த சிறப்பு காவல் ரோந்து போலீசார் மேற்கொள்வர்கள். மேலும் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயக்கப்பட்டு பொதுமக்களிடமிருந்து பெறப்படும் அழைப்புகளுக்கு உடனடியாக சம்பவ இடத்திற்கு செல்வதால் பிரச்சினைகள் உடனடியாக கண்டறியப்பட்டு எளிதில் தீர்வு காணப்படும்.
அதேபோல், பொதுமக்கள் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் போது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தங்களின் விவரங்களை அளித்தால் அந்த பகுதிகளில் இரவு நேரங்களில் குற்ற தடுப்பு நடவடிக்கையில் இந்த சிறப்பு காவல் ரோந்து குழு பாதுகாப்பு பணியில் ஈடுபடும். இவ்வாறு அவர் கூறினார். இதில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.