0 0
Read Time:5 Minute, 0 Second

தமிழ்நாட்டிற்கு 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்று வரும் 31ம் தேதி வரை காவிரியில் இருந்து 3000 கன அடி தண்ணீரை தமிழ்நாட்டிற்கு திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசு மறுத்து வந்ததால் காவிரி ஒழுங்காற்று குழு, மேலாண்மை ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையிட்டது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு தடைவிதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு தரப்பில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.

காவிரி விவகாரம் தொடர்பான தமிழ்நாடு அரசின் வழக்கு கடந்த செப்டம்பர் 21-ம் தேதி நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆகஸ்ட் மாதம் முதல் தண்ணீர் திறப்பதில் கர்நாடகா பிரச்னை செய்து வருவதாகவும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடகா செயல்படுத்துவதில்லை எனவும் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கர்நாடக அரசு தரப்பில், தற்போதைய சூழலில் 2,500 கன அடி தண்ணீரை மட்டுமே திறக்க முடியும் என கூறப்பட்டது. மேலும், தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு மட்டும் தண்ணீர் கேட்பதாக கூறிய கர்நாடக அரசு தரப்பு,
கர்நாடகாவில் குடிநீருக்கு தண்ணீர் தேவை உள்ளதால், தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை திறப்பதில் பிரச்னை உள்ளதாக தெரிவித்தது.

இதனை அடுத்து வாதங்களை கேட்ட நீதிபதிகள், காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கவும் நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.

பின்னர் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநில அதிகாரிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியானது. தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

கர்நாடகா மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், அக்டோபர் 11 -ம் தேதி காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 88-வது கூட்டம், டெல்லியில் அக்குழுவின் தலைவர் வினீட் குப்தா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திலும், அக்டோபர் 31ம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு 3000 கன அடி தண்ணீரை கர்நாடகா திறக்க வேண்டும் என பரிந்துரைத்தது.

இதற்கிடையே, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் தொடங்கி நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து உறுப்பினர்கள் கலந்து கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி வரும் 31ம் தேதி வரை காவிரியில் இருந்து 3000 கன அடி தண்ணீரை தமிழ்நாட்டிற்கு திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %