சிதம்பரம்; சிதம்பரத்தில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வீதியில் மண்டை ஓடு மற்றும் மனித எலும்புகள் கிடந்ததால் பரபரப்பு நிலவியது.
சிதம்பரம் காசு கடை வீதியில் கூத்தாடும் பிள்ளையார் கோவில் அருகே, நேற்று காலை நகராட்சி துப்புரவு பணியாளர் வாணிஸ்ரீ,24; மற்றும் ஊழியர்கள் குப்பைகளை சேகரித்தனர். அப்போது, வெள்ளை நிற ஜூட் பையில் மனித மண்டை ஓடு, இரண்டு கை மற்றும் கால் எலும்புகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தகவலறிந்த சிதம்பரம் சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திறகு சென்று, மனித எலும்புகளை கைப்பற்றி, ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குப்பையில் மண்டை ஓடு மற்றும் மனித எலும்புகளை வீசியது யார். எதற்காக அவர்கள் மனித எலும்புகளை கொண்டு வந்தனர் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.