ஓய்வுபெற்ற ராணுவ வீரர் அமல்ராஜ் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில், நடிகை விஜயலட்சுமி தொடர்ந்துள்ள வழக்கு தொடர்பாக, நாளை ஆஜராக வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் தெரிவிக்க, வளசரவாக்கம் போலீசார் நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு சென்றனர்.
அப்போது சீமான் வீட்டில் இல்லாததால், வீட்டின் முன்பு கேட்டில் நாளை ஆஜராக வேண்டும் என சம்மனை போலீசார் ஒட்டிச் சென்றனர். போலீசார் சம்மனை ஒட்டிய சில நிமிடங்களில் சீமான் ஆதரவாளர் சம்மனை கிழித்து எறிந்தார்.
இதனையடுத்து இதுதொடர்பாக விசாரணை நடத்த நீலாங்கரை ஆய்வாளர் பிரவின் ராஜேஷ் மற்றும் இருவர் சீமான் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் பாதுகாவலர் அமல்ராஜ் போலீசாரை உள்ளே விட அனுமதி மறுத்தார். இதனால் போலீசார் அவரை எட்டித் தள்ளி உள்ளே நுழைந்தனர். இதில் போலீசாருக்கும், காவலர் அமல் ராஜுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது அமல்ராஜ் தனது பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியை, போலீசாருக்கு எதிராக எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் மூவர் அவரை தாக்கி, காவல்துறை வாகனத்தில் ஏற்றி சென்றனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது. சீமான் வீட்டு காவலர் அமல்ராஜை, போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்ற நிலையில், அவர்மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில் ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை முயற்சி வழக்கு மற்றும் 2 ஆயுத வழக்கு என 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது அமல்ராஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.