தமிழகத்திலும் பிளஸ் 2 தேர்வுகள் ரத்தா?.. அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் இன்று ஆலோசனை!
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடத்தப்படுமா என்பது குறித்து இன்றைய தினம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா பரவலுக்கு மத்தியில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு தேர்வுகளை நடத்துவது என்பது குறித்து அண்மையில் மாநில அரசுகளுடன் மத்திய கல்வித் துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்திற்கு பின்னர் மாநில அரசுகளின் ஆலோசனைகளையும் கருத்துகளையும் மத்திய அரசு கேட்டது. இந்த நிலையில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு தொடர்பாக இறுதி முடிவை எடுக்க நேற்றைய தினம் பிரதமர் மோடி கல்வித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்திற்கு பிறகு, மாணவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வதாக மோடி அறிவித்தார். இந்த நிலையில் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு நடத்துவது குறித்து மத்திய அரசு எடுக்கும் முடிவை பொறுத்தே மாநில அரசும் பிளஸ் 2 தேர்வு நடத்துவது குறித்து ஒரு முடிவை அறிவிக்கும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடத்தலாமா ரத்து செய்யலாமா என்பது குறித்து இன்றைய தினம் பள்ளிக் கல்வித் துறை உயரதிகாரிகளுடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்துகிறார்.