கொரோனா நோய்த் தொற்றால் பெற்றோரை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளின் பெயரில் ரூ. 5 லட்சம் வைப்பு நிதியாக அரசு சார்பில் வழங்கப்படும். இந்த தொகை வட்டியுடன் சம்பந்தப்பட்ட குழந்தைக்கு 18 வயது பூர்த்தி அடையும்போது வழங்கப்படும். கொரோனா நோய்த் தொற்றால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் வழங்கப்படும். அதேபோல் அனைத்து அரசு நலத்திட்டங்களிலும் முன்னுரிமை அளிக்கப்படும். இந்த நிவாரண திட்டங்களைச் செயல்படுத்த விரைவில் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து தற்போது தமிழ்நாடு அரசு கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான திட்டங்களைச் செயல்படுத்த வழிகாட்டுதல் குழுவை அமைத்துள்ளது.
நிதித்துறை செயலாளரைத் தலைவராகக் இக்குழுவில் சமூக நலன் & சத்துணவுத் திட்டத்துறைச் செயலாளர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைச் செயலாளர், சமூக நலத்துறை ஆணையர், குழந்தைகள் நலனுக்காக பணியாற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த 2 பேர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் இக்குழு கூடி முன்னதாக ஆலோசனை நடத்தியுள்ளது. திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த தேவைப்படும்போது இந்தக்குழு கூடி ஆலோசனை மேற்கொள்ளுவார்கள்” என அறிவிப்பு வெளியாகியுள்ளது.