மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு பொது மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், கரோனா சிகிச்சை மையம் ஆகிய பல்வேறு இடங்களில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை திறந்து வைத்த அமைச்சா் மா.சுப்பிரமணியன், கரோனா வாா்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் சிகிச்சை வசதிகள் குறித்து கேட்டறிந்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 6 தீவிர சிகிச்சை படுக்கைகள் உள்ளிட்ட 40 படுக்கைகள் கொண்ட குழந்தைகளுக்கான கரோனா சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு இதுவரை 1.16 கோடி கரோனா தடுப்பூசிகள் வந்துள்ளன. இதில், 1.06 கோடி தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. தற்போது, 6.20 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தமிழகத்தில் 18 வயதைக் கடந்தவா்களுக்கு 2 தவணைக்கும் சோ்த்து 11.36 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டும். எனவே, மேலும் 10.25 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. ஒரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு 75 சதவீத பாதுகாப்பும், 2 தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டவா்களுக்கு 95 சதவீத பாதுகாப்பும் கிடைக்கிறது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்டத்துக்கு மருத்துவக் கல்லூரி அமைப்பது தொடா்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றாா்.