போலீஸ்க்கு கொலை மிரட்டல் விடுத்த இந்து முன்னணி நிர்வாகி மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!. சேலத்தில் போலீசாருக்கு இந்து முன்னணி பிரமுகர் கொலை மிரட்டல்..!!
சேலத்தில் போலீசார் வாகன தணிக்கையின் போது நண்பருக்கு 200 ரூபாய் அபராதம் விதித்ததால் ஆத்திரமடைந்த இந்து முன்னணி பிரமுகர், காவல்துறையினரை மிரட்டியது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி விசாரணை மேற்கொண்ட போது உரிய ஆவணங்கள் இல்லாததால் போலீசார் அவருக்கு 200 ரூபாய் அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது. அபராதம் செலுத்திய நபர், அவருடைய நண்பரும் இந்து முன்னணியின் சூரமங்கலம் ஒன்றிய செயலாளருமான செல்லபாண்டியனிடம் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த செல்லபாண்டியன் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு வசூலித்த அபராத தொகையை திருப்பி தராவிட்டால் சங்கை அறுத்துவிடுவேன் என கொலை மிரட்டல விடுத்துள்ளார். மேலும் கழுத்தை அறுத்துவிடுவேன், கொளுத்தி விடுவேன் எனவும் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக செல்லபாண்டியன் போலீசாருடன் வாக்குவாதம் செய்தார். இது காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காணொலி காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.