0 0
Read Time:5 Minute, 15 Second

எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜனதாவுக்கு எதிரான நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பா.ஜ.க ஆட்சி கடைபிடித்து வரும் மக்கள் விரோதக் கொள்கைகளின் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வேலையின்மை அதிகரித்துள்ளது. கடுயைான பொருளாதார நெருக்கடியில் நாடு தள்ளப்பட்டிருக்கிறது.

கொரோனா முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் சுரண்டும் விதமாக ஒவ்வொரு நாளும் பெட்ரோல் டீசல் விலையை பா.ஜனதா அரசு உயர்த்தி வருகிறது. பா.ஜ.க. அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து இடதுசாரி கட்சிகளும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தமிழ்நாடு முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்துவதென்று முடிவு செய்து உள்ளோம்.

அதன் அடிப்படையில் எதிர்வரும் 28, 29, மற்றும் 30-ந்தேதி ஆகிய மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறும் போராட்டங்களில் ஜனநாயக சக்திகள் பெருந்திரளாகப் பங்கேற்று இந்திய ஒன்றிய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை முறியடிக்க முன்வர வேண்டுமென அழைக்கிறோம்.

கச்சா எண்ணெய்யின் விலையைக் குறைக்குமாறு எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளை வலியுறுத்தும் பா.ஜ.க. அரசு ஏழை எளிய நடுத்தர மக்களை வாட்டி வதைக்கும் விதமாக செஸ் என்றும் கூடுதல் வரியை விதித்து பெட்ரோல், டீசல் விலையை செயற்கையாக உயர்த்திச் சுரண்டுவது ஏன்?

கொரோனா நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி மட்டும்தான் ஒரே வழி என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மக்களுக்கு தடுப்பூசி கிடைப்பதை உத்தரவாதப்படுத்தாக பா.ஜனதா அரசு அந்தத் தடுப்பூசியிலும் கூட தமக்கு வேண்டிய தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்க உதவுகிறது. மோடி அரசு தடுப்பூசி விநியோகத்தை சரிவர செய்யவில்லை என்பதால் உச்சநீதிமன்றமே தலையிட்டு அதை முறைப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தகைய நெருக்கடியான காலத்தில் மக்கள் சந்தித்து வரும் கடுந்துயரத்தைப் போக்கும் கோரிக்கைகளை முன்வைத்து இடதுசாரி கட்சிகள் ஜூன் 16 முதல் இருவார கால நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் இடதுசாரி கட்சிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளும் ஒருங்கிணைந்து நாளை 28-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி, 30-ந்தேதி என மூன்று நாட்கள் தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மையங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அழைப்பு விடுத்துள்ளோம்.

கோரிக்கைகள்:

  1. நாளுக்குநாள் தாறுமாறாக அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளை கட்டுப்படுத்தி, 2014 முததல் உயர்த்தப்பட்ட கலால் வரிகளை பெருமளவு குறைத்து விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்.
  2. கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் தடுப்பு மருந்துகள் உட்பட உயிர் காக்கும் மருந்துகளின் கள்ள வணிகத்தைத் தடுப்பதோடு, அவற்றின் மீதான ஜிஎஸ்டி வரியை முற்றாக நீக்கி, நியாயமான விலையில் மக்களுக்கு மருந்துகள் தட்டுபாடின்றிக் கிடைப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும்.
  3. செங்கல்பட்டு இந்துஸ்தான் பயோடெக் தடுப்பு மருந்துகள் உற்பத்தி வளாகத்தை தமிழ்நாடு அரசிடம் தாமதமின்றி வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image
ImageImage
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %