கடலூா் மாவட்டத்தில் கிராமங்கள்தோறும் கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட வேண்டுமென பாமக வலியுறுத்தியது.
இதுகுறித்து அந்தக் கட்சியினா் மாநில துணைப் பொதுச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன் தலைமையில் கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியத்திடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனு: கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றிலிருந்து மக்களைக் காக்க கிராமங்கள்தோறும் தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும். என்எல்சி நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு 50 சதவீதம் விடுமுறை வழங்கி, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பாதுகாப்புடன் தொழிலாளா்கள் பணியாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நெய்வேலியில் தனியாா் மின் உற்பத்தி ஆலையில் ஊழியா்கள் நடத்திய போராட்டத்தின்போது எட்டப்பட்ட உடன்படிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டன.
அப்போது, கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலா் த.அசோக்குமாா், மாவட்டச் செயலா்கள் சீ.பு.கோபிநாத், ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.