கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு வந்த அனைத்து ஆசிரியர்கள் கற்றல், கற்பித்தலுக்கான பணிகளை தொடங்கினர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையில் கூடுதல் தளர்வுகளையும் அறிவித்து வருகிறது. ஆனால் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இருந்தாலும் கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு, வாட்ஸ்-அப் மூலம் ஆசிரியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மாணவர்கள் பதில் எழுதி அனுப்பி வருகின்றனர். அதை ஆசிரியர்கள் மதிப்பீடு செய்து வருகின்றனர்.
இதற்கிடையில் பள்ளிகளை திறப்பதற்கான ஆயத்த பணிகளை அரசு எடுத்து வருகிறது. அதற்கு முன்னோட் டமாக இது வரை சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு சென்று வந்த ஆசிரியர்கள், இனி முழு அளவில் வர வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. மேலும் ஆசிரியர்கள் பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியது
அதன்படி கடலூர் மாவட்ட அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வர வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். இதையடுத்து நேற்று மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு அனைத்து ஆசிரியர்களும் வருகை தந்தனர்.
அவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தக்க ஆலோசனைகள் வழங்கினர். தொடர்ந்து பள்ளி கால அட்டவணை தயாரித்தல், விலையில்லா பாட புத்தகங்கள் மற்றும் கற்றல் கற்பித்தலுக்கான பணிகள், மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி மூலமாக கற்ற பாட விவரங்களுக்கு ஏற்ப வீட்டுப்பாடம் வழங்குதல், அவற்றை மதிப்பீடு செய்தல், மதிப்பீடு செய்த விவரங்களை பதிவேடுகளில் பதிவு செய்து பராமரித்தல் போன்ற பணிகளை செய்தல் போன்ற பணிகளை தொடங்கினர்.
இதேபோல் எத்தனை மாணவர்களிடம் செல்போன், தொலைக்காட்சி இல்லை என்ற விவரத்தையும் நாளை மறுநாளுக்குள் (வியாழக்கிழமை) கணக்கெடுத்து ஒப்படைக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.