நாகூர் அருகே சாலையின் குறுக்கே பன்றிகள் வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த போலீஸ் ஏட்டு உயிாிழந்தார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனம் கஞ்சமலை தெருவை சேர்ந்த பிரபாகரன்(வயது37). இவர் தலைஞாயிறு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று பிரபாகரன் நாகூரை அடுத்த மேலவாஞ்சூரில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக வேதாரண்யத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் குறுக்கே பன்றிகள் கூட்டமாக வந்தன. இதனால் பிரபாகரன் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி சாலை ஓரத்தில் நின்ற நாகூர் மாதா கோவில் தெருவை சேர்ந்த ஜெயசீலன்(40) மீது மோட்டார் சைக்கிளுடன் மோதி இருவரும் கீழே விழுந்தனர். இதில் ஜெயசீலனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பிரபாகரன் படுகாயமடைந்தார்.
இது குறித்து தகவலறிந்த நாகூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இருவரையும் மீட்டு நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் பிரபாகரன் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பிரபாகரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து பிரபாகரன் உடல் சொந்த ஊரான புஷ்பவனம் கிராமம் கஞ்சமலை தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் புஷ்பவனத்தில் உள்ள மயானத்தில் போலீஸ் மரியாதையுடன் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. உயிரிழந்த போலீஸ் ஏட்டு பிரபாகரனுக்கு பவானி என்ற மனைவியும் அகிலேஷ் (14), அபூர்வன்(3) ஆகிய மகன்களும் உள்ளனர்.