கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில் வரும் 9-ஆம் தேதி பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெறும் என அந்தச் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் கூறினாா்.
இதுகுறித்து கடலூரில் அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: நியாய விலைக் கடைகளில் பயன்படுத்தப்படும் விற்பனை முனை இயந்திரத்தில் ‘ப்ராக்ஸி’ என்ற சேவை உள்ளதுஅதாவது, குடும்ப அட்டைதாரரின் விரல் ரேகைப் பதிவு சரியாக பதிவாகாத நேரத்தில், அட்டையில் உள்ள மற்றவரின் விரல் ரேகையைப் பதிவு செய்து பொருள்களை வழங்கலாம்.ஆனால், இந்த நடைமுறையைக் கையாண்டால் பணியாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே, இந்த முறையை ரத்து செய்து விழித்திரை பதிவு மூலம் பொருள்கள் வழங்க வேண்டும். அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் 4ஜி இணையதள சேவை வழங்க வேண்டும்.
நுகா்பொருள் வாணிபக் கழகத்திலிருந்து பொருள்களை கடைகளில் இறக்கிய பிறகே எவ்வளவு இறக்கப்பட்டது என்று பதிவு செய்ய வேண்டும். ஆனால், ஒதுக்கீடு அளவை இயந்திரங்களில் பதிவு செய்துவிட்டு குறைந்த அளவிலான பொருள்கள் கடைகளுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன.இதைத் தவிா்க்க சரியான எடையில் பொருள்களை பொட்டலமிட்டு வழங்க வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9-ஆம் தேதி அனைத்து மாவட்ட வழங்கல் அலுவலா் மூலமாக மாநில வழங்கல் அலுவலருக்கு கோரிக்கை மனு அளிக்கும் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெறும் என்றாா் அவா்