ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் தற்போது மூடப்பட்டுள்ளது. விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆப்கானிஸ்தானில் இருக்கும் மக்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது!
ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்திருக்கும் நிலையில் அந்நாட்டில் இருக்கும் வெளிநாட்டினர், பொதுமக்கள் பலர் அங்கிருந்து வெளியேற முயன்று வருகிறனர். இதன் காரணமாக விமான நிலையத்தில் மக்கள் பெருமளவில் கூடினர்.
இந்த நிலையில் காபூல் விமான நிலையத்தை மூடுவதாக அறிவித்துள்ளது தாலிபன். மேலும் அனைத்து வெளிநாட்டுக்குமான விமான சேவையை ரத்து செய்வதாக அறிவித்தது. இதன் காரணமாக அங்கு இருக்கும் இந்தியர்களை மீட்பதில் சிக்கல் எழுந்திருக்கிறது. அங்கு சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்க இன்று மதியம் டெல்லியில் இருந்து ஆப்கானிஸ்தான் செல்ல இருந்த விமானம், தற்போது செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, காபூல் விமான நிலையத்தில் திடீர் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது வரை இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியானதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, ஆப்கனில் இருந்து வெளியேற விரும்பும் மக்களை தடுக்க கூடாது என பல நாடுகளின் தலைவர்கள் தாலிபனை கேட்டு கொண்டனர். தற்போது காபூல் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால், பல்வேறு நாடுகளிலும் பதற்றம் அதிகரித்துள்ளது.