சென்னை: தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், நீலகிரி, கோவை, கடலோர மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 4 நாட்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டையில் 9 செ.மீ., திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 8 செ.மீ. மழையளவு பதிவாகியுள்ளது. அடுத்த 3 நாட்களும் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.