அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை தொடங்க, கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு தரவரிசைப் பட்டியல்படி, ஆன்லைன் அல்லது நேரடி கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. கலந்தாய்வை நாளை மறுநாள் தொடங்கி செப்டம்பர் 3-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம் ஆணையிட்டுள்ளது.
+2 மதிப்பெண் சான்றிதழ், இதர சான்றிதழ்களை சரிபார்த்த பின்னர் சேர்க்கையை உறுதி செய்ய அறிவுறுத்தியுள்ள கல்லூரிக் கல்வி இயக்ககம், 10 புள்ளி 5 சதவீத இடஒதுக்கீட்டையும் கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளது. கணவரை இழந்தோர் மற்றும் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தோரின் பிள்ளைகளுக்கு, மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை வழங்கவும் கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.